ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது சட்டப் பஞ்சாயத்து இயக்க பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள மனுவில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித் தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என குறிப்பிட்டிருந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டாலும், முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுகிறது எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், ஒரே நாளில் முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.