என்னுடைய தனிப்பட்ட பயணங்கள் எல்லாம் வெளிப்படையானவை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகள் சுற்றுப்பயணத்திற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதில் உள்ள மர்மம் என்ன என கேள்வி எழுப்பினார். அதை ஸ்டாலின் விளக்காமல் நான் வெளிநாடு பயணம் செல்வதை விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை, உண்மையான காரணங்களை கூற வேண்டும். நான் வெளிப்படையாகவே வெளிநாடு பயணம் செல்கிறேன். குடும்பத்தினருடன் நான் செல்லும் பயணங்களை அரசுடன் ஒப்பிடுவதா? திசை திருப்பும் முயற்சியில் தினை அளவு நன்மையும் விளையாது. வெளிப்படையாக நான் செல்லும் பயணங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார் முதல்வர். இந்த ஒப்பீடு ஒரு முதல்வருக்கு அழகல்ல. ஒப்பீடும் முறையானது இல்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் முதலீடு கிடைக்காமல் தத்தளித்து தனிமரமாக நிற்கிறது தமிழகம். தமிழக மக்களிடையே பரவியிருக்கும் சந்தேகங்களுக்கு நேர்மையாக விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.