சத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு... கீழமை நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு... கீழமை நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு... கீழமை நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
Published on

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கவுள்ளது என சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன் ஆகியோர் ஜாமீன்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


அதில், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கின்றோம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது.

எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்கும்பட்சத்தில் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் கட்டுப்படுவோம். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவோம். வழக்கில் கைது செய்யப்பட்டு 130 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக ரகுகணேஷ் மற்றும் காவலர் முருகன் பார்க்கப்படுகின்றனர். இவர்கள்தான் தந்தை, மகன் இருவரையும் மிருகத்தனமாக தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். மேலும் காவலர் ரேவதி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவரின் பங்கு முக்கியமானது என தெரியவருகிறது. சிபிஐ விசாரணையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளிகள் என்பது உறுதியாகிறது. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். குறிப்பாக இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நவம்பர் 11ஆம் தேதி சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.

எனவே குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.மனுதாரர் தரப்பில், புகார் அடிப்படையிலேயே, தந்தை மகன் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், காவல் நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து புகார்களுக்கும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறதா? அப்படி இருந்தால் FIR பதிவு செய்ய கோரி பலர் ஏன் நீதிமன்றம் வருகிறார்கள்? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com