செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
நாகை மாவட்டம் பாப்பாகோவில் கிராமத்தில் அமைந்துள்ள பாப்பாவூர் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தர்கா கந்தூரி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மஞ்சக்கொல்லை கமாலியா ஜாமியா மஸ்ஜித்-ல் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் மற்றும் பல்லக்குகள் வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தர்ஹாவை வந்தடைந்தது.
இதையடுத்து ரதங்களில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்ஹாவின் கொடிமரத்திற்கு கொண்டு சென்று துவா செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன பூசும் நிகழ்வு வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.