சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தனது இருசக்கர வாகனத்தில் வானகரம் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்று ரஞ்சித் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ரஞ்சித், விபத்து ஏற்படுத்திய கார் மீதே விழுந்துள்ளார்.
விபத்துக்குள்ளானவர் தன்னுடைய காரின் மேல்புறத்தில் தான் இருக்கிறார் என்பது தெரியாமல், கார் ஓட்டுநர் அங்கிருந்து காரை ஓட்டி தப்பிச் சென்றுள்ளார். இதனைக் கண்ட போக்குவரத்து காவலர்கள் ஒரு கிமீ தூரம் காரினை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். உடனடியாக கார் மேல் இருந்த ரஞ்சித்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து காரினை ஓட்டி வந்தது விருகம்பாக்கத்தை சேர்ந்த கணேச மூர்த்தி என்பதும், இவர் திருமழிசை காய்கறி சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
கணேச மூர்த்தியைக் கைது செய்த போலீசார் விபத்து ஏற்படுத்தியது, தப்ப முயற்சி செய்தது போன்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ரஞ்சித் குமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்