சங்ககிரி காவல் நிலையத்தில் இருந்த குப்பைக் கழிவுகளை எரிக்கும் போது மர்ம பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. அப்போது தகரம் சிதறி மேலே பட்டதில் சங்ககிரியைச் சேர்ந்த நியாமத்துல்லா என்பவர் உயிரிழந்தார். பவானியைச் சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி. அருண் கபிலன், சங்ககிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா நேரில் விசாரணை நடத்தினார். மேலும் வெடித்த பொருள் குறித்தும் அறிய அங்கிருந்த மாதிரிகளை சேகரித்த காவல் துறையினர் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காவல் நிலையத்தில் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ள நிலையில், சுத்தம் செய்த போது இந்த விபத்து நிகழ்ந்தாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உயிரிழந்த நபரின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியுள்ளனர்.