வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த 4 குழந்தை திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கும் இன்று காலை பள்ளிகொண்டா பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் கட்டாய திருமணம் நடைபெற இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இது தொடர்பாக வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமியை மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமிக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, மண்காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் அங்கராவரம் பகுதியை 16 வயது சிறுமி என மூவருக்குமே கட்டாய குழந்தை திருமணம் நடைபெற இருப்பதாக அந்தந்த பகுதி காவல் துறையினருக்கு வந்த ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்படி நடவடிக்கை மேற்கொண்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அனைத்து சிறுமிகளை மீட்டுள்ளனர். பின்பு மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரையும் அரசு காப்பகங்களில் ஒப்படைத்தனர்.