சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்
Published on

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்தப் பதவிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார். மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி பிறந்த சஞ்சீவ் பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.

1990-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட அவர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சிகள் எடுத்தார். தவிர, டெல்லி, மும்பை, அலகாபாத், பாட்னா, ஜார்க்கண்ட், கவுகாத்தி, ஒடிசா, கர்நாடகா உள்பட பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல் சாசனம், சிவில் சட்ட விவகாரங்களில் சிறப்பாக வழக்காடியவர்.

குறிப்பாக கார்ப்பரேட் மற்றும் அறிவுசார் சொத்துரிமை சட்ட விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com