பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு விடீயோ எடுக்க நீதிமன்றம் தடை

பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு விடீயோ எடுக்க நீதிமன்றம் தடை
பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு விடீயோ எடுக்க நீதிமன்றம் தடை
Published on

prank show எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்கவும், அதனை தொலைக்காட்சிகளில் வெளியிடவும் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தற்போது "Tik Tok" செயலி நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளது. "Tik Tok" சீனா நாட்டில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் செயல்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டின் கள ஆய்வில் 500 மில்லியனுக்கு அதிகமானோர் "Tik Tok" செயலியை பயன்படுத்துகிறார்கள்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் "Tik Tok" செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 2019, பிப்ரவரி மாதம், "Tik Tok" செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. "Tik Tok" செயலியை பல இளைஞர்கள் தவறான பாதையில் பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் "Tik Tok" செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி "Tik Tok" செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என  கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ""Tik Tok" செயலி காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. இதனால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லும் நிலை அதிகரித்து உள்ளது. "Tik Tok" செயலி அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்தியாவிலும் "Tik Tok" செயலியை தடை செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள்," தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்த சட்டத்தை ஏன் இங்கும் கொண்டுவரக்கூடாது? என கேள்வி எழுப்பினர். ப்ளூ வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும்" என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து,  "Tik Tok" செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கறிஞர்கள் தரப்பில், prank show என்று சொல்லக்கூடிய குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகையால் அதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து நீதிபதிகள்  prank show எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுப்பதற்கும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டு வழக்கினை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com