பருவமழையின் கோர தாண்டவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கேரளா. வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டகை, மேப்பாடி என அருகே அடுத்தடுத்த இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், மூணாறிலும் பல்வேறு சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கொச்சி மற்றும் தமிழ்நாட்டில் உடுமலை, தேனிக்கு செல்லும் சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலும் நிலச்சரிவு நிகழ்வுகள் நடந்தன. வால்பாறை சோலையார் அணை அருகே இடதுகரை என்ற இடத்தில், மண் சரிவு ஏற்பட்டு 14 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், நீலகிரி மாவட்டம் கூடலூர் காட்சிமுனை சாலையில் மண்சரிவு ஏற்பட்டு உதகை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், கர்நாடகாவில் மங்களுாரு - பெங்களுாரு தேசிய நெடுஞ்சாலையில் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஷிரடி காட் பகுதியில் ஏற்பட்ட நிகழ்வால், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணுக்குள் புதையுண்டன. மண் மற்றும் பாறைகளை அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.