காஞ்சிபுரம்: குப்பையோடு குப்பையாக கொட்டப்பட்ட கொரோனா நோயாளிகளின் மருத்துவ கழிவுகள்

காஞ்சிபுரம்: குப்பையோடு குப்பையாக கொட்டப்பட்ட கொரோனா நோயாளிகளின் மருத்துவ கழிவுகள்
காஞ்சிபுரம்: குப்பையோடு குப்பையாக கொட்டப்பட்ட கொரோனா நோயாளிகளின் மருத்துவ கழிவுகள்
Published on

காஞ்சிபுரம் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட பல்வேறு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து பாட்டில் மருத்துவக் கழிவுகள் நகராட்சி குப்பை கிடங்கில் மலைபோல் கொட்டப்பட்டுள்ளன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துப் பாட்டில் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கழிவுகளை கொட்டியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் இதர நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பின்பு வெளியே போடப்படும் சிரிஞ்சுகள், ஊசிகள், மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், கையுறைகள் என அனைத்து மருத்துவக்கழிவு எனப்படுகிறது. இம்மருத்துவக்கழிவுகளில் காலாவதியான மருந்துகள், வேதிப்பொருள் கழிவுகள், ஆய்வகக் கழிவுகளை மஞ்சள் நிற பைகளிலும், கெட்டுப்போன மருந்துப் பொருள்கள், ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்ச், கையுறைகள் சிவப்பு நிற பைகளிலும், கத்தி, உடைந்த கண்ணாடி போன்றவை வெள்ளை நிற பைகளிலும், கண்ணாடி பொருள்கள், மரப் பெட்டிகள் போன்றவற்றை நீல நிற பெட்டிகளிலும், நான்கு விதமாக தரம் பிரித்து சேகரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.

ஆனால், இந்த கழிவுகளை ஒப்பந்த நிறுவனங்கள் மருத்துவ மனைகளில் பெற்றுக் கொண்டு ட்ரீட்மென்ட் பிளான்ட்களில் இன்சிரேட்டர், மைக்ரோவேவ்ஸ் போன்ற எரிப்பான்கள் மூலம் உயர்வெப்ப நிலையில் எரித்தல் முறையிலும், மறு சுழற்சி முறையிலும், ஆழப் புதைப்பதன் மூலமும் அழிக்கப்படுகிறது. ஆனால் பல தனியார் மருத்துவமனைகள் இவ்விதிகளை பின் பற்றாமல் தங்கள் மருத்துவமனையில் பயன்படுத்திய ஊசி, ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்சு, மருந்து பாட்டில்களை கொட்டிவிடுகின்றனர்.

காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் ஊசி, சிரிஞ்சு, மருந்து பாட்டில்கள் அடங்கிய மருத்துவ குப்பை கழிவுகள், காஞ்சிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் இருபுறமும் குப்பை கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. மருத்துவக்கழிவுகளை வெளியே கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நத்தப்பேட்டை ஏரிக்கரை ஓரத்தில் கொட்டப்படும் இந்த மருத்துவக் கழிவுகளால் பறவைகள், பன்றி, நாய், பசு போன்ற கால்நடைகளும் பெருமளவில் பாதிப்படைகின்றன. மருத்துவக் கழிவுகளை பொதுக் குப்பையோடு சேர்ப்பதால் இக்குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் நோய்கள் பரவும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறும்போது, “மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் படியே அப்புறப்படுத்த வேண்டும் அதை மீறி மருத்துவ கழிவுகளை கொடியவர்கள் யாரென்று கண்டறிந்து அவர்கள் மீது துறை சார்ந்த உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

- பிரசன்னா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com