பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருவேங்கடம் என்பவர் அதில் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய நபராக பார்க்கப்படக்கூடிய பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, ஆற்காடு சுரேஷின் நண்பரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவிற்கும் தொடர்பு இருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா பண உதவி ஏதேனும் செய்தாரா? அல்லது கொலைக்கு நேரடி தொடர்பு உள்ளதா? என்பதை விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறிப்பாக ஆந்திராவில் உள்ள தன் மனைவி வீட்டில் ராஜா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசார் வரும் தகவல் அறிந்து காரில் சீசிங் ராஜா தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. காரின் பதிவு எண்ணை வைத்து தப்பி ஓடிய சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சீசிங் ராஜாவின் இருப்பிடம் குறித்து அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் என 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அவர்களது செல்போன் தொடர்புகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், இவ்வழக்கில் கைதான முக்கிய நபர்களான ராமு, அருள் மற்றும் பொன்னை பாலுவை 3 நாட்கள் காவலில் எடுத்து பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று அவர்களது கஸ்டடி முடிந்து சிறையில் அடைக்க உள்ளனர்.