தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை வரும் ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் வரும் ஜனவரி 13ம் தேதி தொடங்க உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பலூன் திருவிழாவில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 10 பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளன. இதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பைலட்கள் பொள்ளாச்சிக்கு வருகைத் தருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 13ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை 3 நாட்கள் நடைப்பெறும் திருவிழாவில் தினசரி, காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பலூன்கள் பறக்கவிடப்படும் என்றும், சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்