“மது அருந்துகிறார்களா என சிசிடிவி மூலம் கண்காணியுங்கள்” உயர்நீதிமன்றம் அதிரடி

“மது அருந்துகிறார்களா என சிசிடிவி மூலம் கண்காணியுங்கள்” உயர்நீதிமன்றம் அதிரடி
“மது அருந்துகிறார்களா என சிசிடிவி மூலம் கண்காணியுங்கள்” உயர்நீதிமன்றம் அதிரடி
Published on

மதுரை கள்ளழகர் கோவில் பகுதிகளில் மது அருந்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கள்ளழகர் கோவில் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் வேண்டுமென நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," மதுரையின் சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்று கள்ளழகர் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக பல மண்டகப்படிகளும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன. ஆனால் இவை முறையாக பராமரிக்கப்படவில்லை. அதனால் கோவிலின் சொத்துக்கள் பல தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியிருந்தார். 

அவரது மனுவில் “கோயில் சொத்துக்களை முறையாக பராமரித்தாலே, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு  அழகர் திருவிழாவை கோவில் நிர்வாகமே சிறப்பாக கொண்டாடலாம். ஆகவே, கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கவும்,  அடிப்படை வசதிகளை செய்துதரவும், வனம் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை கோரி, 2018 நவம்பர்16ல் அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அழகர் கோவில் பகுதியில் இருக்கும் விடுதிகள் முகம் சுழிக்கும் வகையில் அசுத்தமாகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி வருகிறது. இங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லை. அதோடு மது அருந்துபவர்களால் கோவிலுக்கு வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் மதுரை கள்ளழகர் கோவில் பகுதிகளில் மது அருந்த தடை விதித்தும், கள்ளழகர் கோவில் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான மண்டகப்படிகள் எத்தனை?  கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு? அவற்றை யார் நிர்வகித்து வருகிறார்கள்?  எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அவற்றை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 26ஆம் தேதிக்கி ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com