முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் உயிரிழந்தார். அவருக்கு வயது 90. அவரது உடல் இன்று மாலை தஞ்சை அடுத்த பூண்டியில் தகனம் செய்யப்பட இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் சின்னையா என்கிற அய்யாறு வாண்டையார். 1984ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆறு மாத காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். மேலும் கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறநிலையத்துறை துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டவர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை உயிரிழந்தார். இவரது இழப்பு தஞ்சை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது சகோதரர் துளசி அய்யா வாண்டையார் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.