செய்தியாளர்: நாசர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (59). இவர் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு சாந்தி என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்பு அவரை விட்டுப் பிரிந்த பாலசுப்பிரமணியன், ஏழு வருடங்களுக்குப் பிறகு இஸ்லாம் மதத்தை சேர்ந்த சையதலி பாத்திமா என்பவரை திருமணம் செய்ததோடு தனது பெயரை அன்வர் உசைன் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அன்வர் உசேன், சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து அவரை அடக்கம் செய்வதில் இரண்டு, சமூகத்தைச் சேர்ந்த மனைவிகளுக்குள் பிரச்னை எழுந்தது. இதையடுத்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து முடிவெடுக்க முடியாமல் திணறிய காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின், இறந்தவரின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இரு தரப்பினரையும் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினார். இதனையடுத்து இரு தரப்பினரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அடக்கத்திற்கு முன்பாக இறுதி சடங்குகள் செய்ய முதல் மனைவிக்கும், இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்ய இரண்டாம் மனைவிக்கும் உரிமை கொடுத்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இன்று அன்வர் உசேன் என்ற பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
பின்னர், உடல் இரண்டாம் மனைவி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்ய கழனி வாசல் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரச்னையை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.