“பெண் அமைச்சருக்கு அடக்கம், பணிவு வேண்டும்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை கருத்து.. வானதி காட்டம்!

பெண் அமைச்சருக்கு கொஞ்சம் அடக்கமும் பணிவும் வேண்டுமென மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அவர் இவ்வாறு பேசினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன், நிர்மலா சீதாராமன்
ஈவிகேஎஸ் இளங்கோவன், நிர்மலா சீதாராமன்pt web
Published on

பெண் அமைச்சருக்கு கொஞ்சம் அடக்கமும் பணிவும் வேண்டுமென மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெண் அமைச்சராக இருக்கின்றவருக்கு அடக்கம் பணிவு வேண்டும். அவர் பணிவாக மன்னிப்பு சொல்கிறார். ஆனால், முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல் கல்லைப் போல் அந்த அம்மையார் உட்கார்ந்து இருக்கிறார். மனிதர்களை மதிக்கக்கூடிய மனிதத்தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பெண்களை அடிமைகளாக முன்னிறுத்த முயலும் உங்கள் பிற்போக்குத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து “ஒரு பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை” என்று நீங்கள் கூறுவது, நமது நாட்டில் சம உரிமையும் அரசியல் அதிகாரமும் பெரும் பெண்களைப் பார்த்தால் உங்களுக்கு எத்தனை வயிற்றெரிச்சலாக இருக்கிறது என்பதைக் கோடிட்டு காட்டுகிறது.

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்க நீங்கள் யார்? அரசு பொறுப்பிலிருக்கும் ஒரு பெண்ணையே சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சிக்கும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால், சாமானிய பெண்களை எப்படி நடத்துவீர்கள்?

அரசியல் அதிகாரமிக்க பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணுக்கு அடக்கம் தேவை என்ற உங்களின் கூற்று, உங்கள் கட்சியைச் சார்ந்த திருமதி. சோனியா காந்தி அம்மையார் உட்பட அனைத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி பெண் தலைவர்களுக்கும் பொருந்துமா? ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்தாமல், பெண்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீங்கள் இப்படி பேசுவது ஒன்றும் வியப்பல்ல.

மத்திய நிதியமைச்சரைப் பற்றி பொதுவெளியில் நீங்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு, உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com