“வெறும் வாக்குக்காக மட்டும்தான் சமூக நீதியா?” - திமுக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் சரமாரி கேள்வி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித், தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்!
இயக்குநர் பா.ரஞ்சித்!முகநூல்
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தனது வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டது. பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பெரம்பூரில் இருந்து பொத்தூர் கிராமத்திற்கு, ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 7ம் தேதி நள்ளிரவு 12.50 மணிக்கு, ஜெய் பீம், ஜெய் பீம் என்ற முழக்கத்துடன், சந்தன பேழையில் வைத்து பௌத்த மதச் சடங்கின்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கு நிகழ்வின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்பங்கேற்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட பின்னர் உடனடியாக சென்று அஞ்சலி செலுத்திய இயக்குநர் பா.ரஞ்சித் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு வரை உடனிருந்தார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். வெறும் வாக்குக்காக மட்டும்தான் சமூக நீதியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தமது எக்ஸ் தள பதிவில் , ”1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?

3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

இயக்குநர் பா.ரஞ்சித்!
விக்கிரவாண்டியில் ஓய்ந்தது பரப்புரை... கட்சிகளின் பிரசார யுக்தியாக எதெல்லாம் இருந்தது? ஓர் பார்வை

6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?” என்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் கேள்விகளுக்கு பதிலடியாக திமுகவின் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன் பல்வேறு கேள்விகளை அவரது பதிவுக்கு அடுக்கியுள்ளார்.

அவரது பதிவில், “திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது. அண்ணன் திரு. ஆம்ஸ்டிராங்க் அவர்கள் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது, யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, திமுகவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள்.

அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கு முக்கிய கேள்வி?

இந்த வழக்கில் விசாரண முடியவில்லை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, அதற்குள் போலிசார் கொலைக்கு இதுதான் காரணம் என முடிவு செய்துவிட்டார்களா என எந்த அடிப்படையில் கேள்வி எழுப்புகிறீர்கள்? விசாரணையின் போக்கை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொல்லக் கூடாது என்ற அடிப்படை தெரியாதவரா தாங்கள்?

ஒடுக்கப்பட்டவர்களின் விடி வெள்ளியாய் செயல்படும் திமுகவின் மீது தலித் மக்களின் நலனுக்கெதிரானவர்கள் என்ற போலி பிம்பம் இந்த சம்பவத்திற்கு பின்னர் பல மடங்கு வீரியத்துடன் சமூக வலைத்தளங்களில் கட்டமைக்கப்படுகிறதே அது தங்களுக்கு தெரியவில்லையா? அந்த போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்த பதிவா?

திமுக சரவணன்
திமுக சரவணன்pt web

தமிழ் நாட்டின் காவல்துறை சிறப்பான அமைப்பு. இந்த வழக்கில் எல்லா குற்றவாளிகளையும் கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com