“எங்கள் தாத்தாவிற்கு சிலை வைத்து முதல்வர் பெருமைப்படுத்தி உள்ளார்” டி.எம்.எஸ் பேத்தி நெகிழ்ச்சி!
மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் முழு உருவ வெண்கல சிலையை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பிரபல பின்னணி பாடகரான டி.எம்.சௌந்தரராஜனுக்கு மதுரையில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 11ம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மதுரை முனிச்சாலையில், மாநகராட்சியின் பழைய மண்டல அலுவலக வளாகத்தில் 450 கிலோ எடையில் 7 அடி உயரத்துக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதன் மதிப்பு 50 லட்ச ரூபாய் ஆகும்.
இந்நிலையில், இந்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சாமிநாதன், எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மறைந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு சிலை வைத்ததற்கு, அவரது மகன் டிஎம்எஸ் பால்ராஜ் மற்றும் பேத்தி பானு ரேகா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “எங்கள் தாத்தாவிற்கு சிலை வைத்து முதல்வர் பெருமைப்படுத்தி உள்ளார்” எனக்கூறி பானு ரேகா நெகிழ்ந்தார்.