ஒருபுறம் காலியாகும் வீடுகள்; மறுபுறம் அதிகரிக்கும் வீட்டுவாடகை: தண்ணீர் பஞ்சத்தால் பரிதவிக்கும் சென்னை!

ஒருபுறம் காலியாகும் வீடுகள்; மறுபுறம் அதிகரிக்கும் வீட்டுவாடகை: தண்ணீர் பஞ்சத்தால் பரிதவிக்கும் சென்னை!
ஒருபுறம் காலியாகும் வீடுகள்; மறுபுறம் அதிகரிக்கும் வீட்டுவாடகை: தண்ணீர் பஞ்சத்தால் பரிதவிக்கும் சென்னை!
Published on

நல்ல மழைப்பொழிவு இருந்தால் தான் சென்னை மக்கள் கோடை காலத்தை போராட்டம் இன்றி கடத்த முடியும். மழைப்பொழிவின் அளவு குறைந்தால் கோடை காலத்தில் அது எதிரொலிக்கும். நிலைமை இப்படி இருக்க இந்த வருடம் மழை பெய்யவே இல்லை . தற்போது சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகள் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது. மழைப்பொழிவை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஃபோனி புயல் மேற்கொண்டு வெப்பநிலையை உயர்த்தி சென்றது. தண்ணீர் பிரச்னை, வெப்பக்காற்று என சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரை வாடகை வீடுகளில் தங்கி இருப்பவர்கள் அதிகம். இந்த தண்ணீர் பிரச்னையால் அவர்கள் தண்ணீர் வசதியுள்ள குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் கூட தண்ணீர் பிரச்னை இருப்பதால் தண்ணீர் கிடைக்கும் இடங்களில் வாடகை வீடு தேடி அலைந்துகொண்டு இருக்கிறார்கள். 

சென்னையில் நுங்கம்பாக்கம், சூளைமேடு, மேத்தா நகர், வில்லிவாக்கம், அரும்பாக்கம் உள்ளிட்ட நகரின் மையப்பகுதிகளிலும் தண்ணீர் பிரச்னை இருந்தாலும் முழுவதுமாக வறண்டு விடவில்லை. சமாளிக்கும் அளவுக்கு குடிநீர் வசதி கிடைக்கிறது. இதனால் அப்பகுதிகளையே வாடகைக்கு வீடு தேடுபவர்கள் குறி வைக்கிறார்கள். தேவை அதிகமாவதால் குடிநீர் வசதி கிடைக்கும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் வாடகை அதிகரித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உள்ள தண்ணீர் டேங்குகளுக்கு ஏற்றும் அளவுக்கு தண்ணீர் இல்லாததால் பல குடியிருப்புகள் காலியாக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு அறை வீடு, இரு அறை வீடு என வாடகை வித்தியாசம் இருந்தாலும்,  நகரின் மையப்பகுதியில் குடிநீர் கிடைக்கும் குடியிருப்புகளுக்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் வரை வாடகை உயர்ந்துள்ளது.

சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க குடிநீர் வாரியமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கல் குவாரிகளில் இருந்து குடிநீர், விவசாயக்கிணறுகளின் தண்ணீர், வீராணம் ஏரி நீர், கடல்நீரை குடிநீராக்கும் 2 நிலையங்களில் இருந்து குடிநீர் என பல வழிகளிலும் சென்னைக்கு குடிநீர் வருகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் ஆந்திராவில் மழை பெய்தால் கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை பெய்து சென்னையின் ஏரிகள் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதே உண்மை.

பஞ்சத்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள் என்று நாம் எங்காவது படித்திருப்போம். அதன் ஒரு முன்னோட்டம் தான் தண்ணீர் பிரச்னையால் வீடுகளை காலி செய்து நகருக்குள்ளே அலைவதும். இதனை அடுத்த நிலைக்குச் செல்லாமல் தடுக்க வேண்டுமென்றால் வரும் காலங்களிலாவது மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகளை மேம்படுத்தி தண்ணீர் சேகரித்தல் போன்ற நீர் சேகரிப்பில் கவனம் செலுத்த வேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com