பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி
ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு,
திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அருள்,
திருவேங்கடம்,
திருமலை,
திருனின்றவூர் பா.ஜ.க நிர்வாகி செல்வராஜ்,
மணிவண்ணன்,
சந்தோஷ்,
ராமு,
கோகுல்,
விஜய்,
சிவசக்தி,
தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஹரன்,
அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணைச் செயலாளர் மலர்கொடி,
தி.மு.க திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசன் மகன் சதீஷ்,
வட சென்னை பா.ஜ.க மகளிரணி துணை செயலாளர் அஞ்சலை,
கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன்,
வழக்கறிஞர் சிவா,
பிரதீப்,
முகிலன்,
அப்பு,
நூர் விஜய் (எ) விஜயகுமார்
என 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி கைதான சில தினங்களில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், மிகப்பெரிய ரவுடிகளான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களை ஒவ்வொருவராக கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்ட போது, அதிக அளவிலான பணப் பரிமாற்றம் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததால், அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கி கணக்கு பணபரிவர்த்தனைகள், சொத்து பட்டியல், கொலையில் கிடைத்த பணத்தை எதில் பயன்படுத்தியுள்ளனர்? என்ற முழு விவரங்களையும் போலீசார் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல், ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக எவ்வளவு பணம் கைமாறி இருக்கிறது என்பதற்கான பட்டியலை தயாரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ரவுடிகளின் சொத்துக்கள் மற்றும் அவர்களது பணத்தை முடக்கினால் ரவுடிசம் கட்டுப்படுத்தப்படும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மோகன் தாஸ் பேசுகையில், முன்பு இருந்த IPC மூலம் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய இயலாது. ஆனால் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் மூலம் குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இரண்டையும் முடக்க முடியும். இதன் மூலம் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தினை மற்ற யாரும் பயன்படுத்த இயலாது. மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டால் குற்றங்கள் குறைவதற்கு வழிவகை செய்யும் எனத்தெரிவித்தார்.