புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது.
‘கஜா’ புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளது. நாகை, தஞ்சை போன்ற மாவட்டங்களில் புயல் கடுமையான பாதிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தங்களது வீடு, கடைகள், கால்நடைகள், தோட்டம், விவசாய பயிர்கள் என பொதுமக்கள் அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர். இதனைதொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெறும் என தெரிவித்தார்.
இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றாலும், இதன் காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும் என தெரிவித்தார். வடகடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் தென்கடலோர மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கூறினார். 20 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பரவலாக மழை பெய்யும் என கூறிய அவர், தென்கிழக்கு, தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.