ஆம்ஸ்ட்ராங் உடல் எங்கே அடக்கம் செய்யப்படுகிறது? நீதிமன்றத்தில் விசாரணை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், பெரம்பூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு, காலை 8.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்முகநூல்
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், பெரம்பூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு, காலை 8.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரின் உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி மறுத்ததை தொடர்ந்து, உடலை வாங்க மறுத்து மருத்துவமனைக்கு முன்பு கூடி உறவினர்களும், அக்கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. கட்சி அலுவலகத்திலேயே உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், காலை 8.30 மணிக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றதை அறிந்து, பகுஜன் சமாஜ் தொண்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் முடிந்த பின் பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்
நெல்லை காங். நிர்வாகி To ஆம்ஸ்ட்ராங் | தொடரும் கொலைகள்.. கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!

இன்று மாலை வரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த காலை சென்னைக்கு வரவுள்ளார். இதனால், பெரம்பூர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் ஆஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். அடுத்தக்கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி, எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com