அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி அவிநாசியில் பொதுமக்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு ஆதாரமான அத்திக்கடவு & அவிநாசி திட்டம் இப்பகுதி மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. பவானி ஆற்றிலிருந்து உபரி ஆகும் நீரை கோவை மாவட்டம் அத்திக்கடவிலிருந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை வரை கொண்டு செல்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். அதன் மூலம் இப்பகுதிகளிலுள்ள 72 குளங்கள், 538 குட்டைகளுக்கு கொண்டு வந்து நிலத்தடி நீர் மட்டத்தை செரிவூட்டும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி இப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் 12 நாட்கள் தொடர் உண்ணாவிர போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து தமிழக அரசு 2016 ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி இத்திட்டம் குறித்து அரசாணை வெளியிட்டு, ஆரம்பகட்ட ஆய்வுப் பணிக்காக 3.27 கோடி ரூபாய் ஒதுக்கியது. எனினும் ஓராண்டுகளாகியும் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதில் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.