தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கடந்த அதிமுக ஆட்சியில் கடத்தூர் தனி ஒன்றியமாக பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது புதிய அலுவலகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகை தந்தனர். அதிமுக ஆட்சியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதால், அதிமுகவினர் ஒருபுறம் சாலையோரம் கட்சி கொடி கட்டியும், விளம்பர பதாகையும் திறப்பு விழாவிற்காக வைத்திருந்தனர்.
மேலும் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக திறப்பதால் திமுகவைச் சார்ந்தவர்களும் சாலையின் ஒருபுறம் திமுக கொடி கட்டி, முதலமைச்சர் படம் பொறித்த விளம்பர பதாகைகளை வைத்தனர். இதில் அதிமுக விளம்பரப் பதாகை முன்பு, திமுகவினர் விளம்பர பதாகை வைத்ததாக, இரு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் அதிமுகவினரும் திமுகவினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையறிந்த கடத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதாலும், ஒன்றியக் குழு தலைவர் அதிமுகவை சார்ந்தவர் என்பதால், நாங்கள் விளம்பரப் பதாகை வைத்துள்ளோம் என தெரிவித்தனர். அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் கட்சியின் மூலம் திறப்பதால் நாங்கள் விளம்பரப் பதாகை வைத்திருக்கிறோம் என திமுகவினரும் தெரிவித்தனர். இதனையடுத்து இரு தரப்பினரையும் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி சமரசப்படுத்தினார்.
இதனால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி காவல் ஆய்வாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், ‘பேனரை முன்னாடி வையுங்கள், எவன் கிழித்து விடுவான் என்பதை பார்க்கலாம்’ என ஆவேசமாக பேசியதாகத் தெரிகிறது. இதனால் சிறிது நேரம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்த காவல் ஆய்வாளர் நாகலட்சுமி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சலசலப்பு நடந்த நேரத்திலேயே, மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், எல்லோரும் சலசலப்பு முடிந்து அலுவலகத்திற்கு செல்வதற்குள்ளேயே, தமிழ்நாடு முதலமைச்சர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்து விட்டார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கான புதிய கட்டடம் திறப்பு விழாவில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் திறப்பு விழா முடியும் வரை அலுவலக வளாகம் பரபரப்பாகவே இருந்தது.