தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம் 

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம் 
தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம் 
Published on

தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் 5 இடங்களிலிருந்து 10 ஆயிரத்து 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

தீபாவளிக்காக ஆந்திரா செல்லும் சிறப்புப் பேருந்து‌கள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில்‌ இருந்து இயக்கப்படும். 

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும், கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பிற ஊர்கள் இடையே 8 ஆயிரத்து 310 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தீபாவளி முடிந்து 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 4 ஆயிரத்து 627 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களுக்கு இடையே 6,921 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய தளங்களில் முன்பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com