செய்தியாளர்: எஸ் சந்திரன்
கரூர் அருகே ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட, புதூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (12), மாரிமுத்து (13), விஷ்ணு (13) ஆகிய பள்ளி மாணவர்கள் மூவரும் நேற்று மாலை அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், இரவு வரை வீட்டிற்கு வராததால் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை தேடியுள்ளனர். அப்போது கிணற்றின் அருகே மாணவர்களின் உடைகள் இருந்ததால் சந்தேகத்தில் கிணற்றில் பார்த்துள்ளனர்.
அப்போது கிணற்றில் மாணவர்களின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மாணவர்களின் சலத்தையும் மீட்டனர். இதையடுத்து சடலங்களை கைப்பற்றிய கரூர் நகர காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.