கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்

கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்
கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்
Published on

கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல், நாகை வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதிகாலை 2 மணியளவில் கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்த பின், காற்றின் வேகம் அதிகரித்தது.

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதே போல் மின்கம்பங்களும் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது.

இதனால் 6 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நாகையில் 4 ஆயிரம், தஞ்சையில் 5 ஆயிரம், திருவாரூரில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் மட்டும் 12 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

சேதங்களை பார்வையிடவும் மின் சீரமைப்புப் பணிகளை பார்வையிடவும் நாகை மாவட்டத்துக்கு செல்ல இருப்பதாக தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com