“அது என்னவோ..கோலிக்கும், கும்ளேவுக்கும் ஒத்தே வரவில்லை” மனம் திறந்தார் லஷ்மண்

“அது என்னவோ..கோலிக்கும், கும்ளேவுக்கும் ஒத்தே வரவில்லை” மனம் திறந்தார் லஷ்மண்
“அது என்னவோ..கோலிக்கும், கும்ளேவுக்கும் ஒத்தே வரவில்லை” மனம் திறந்தார் லஷ்மண்
Published on

விராட் கோலிக்கும், அனில் கும்ளேவுக்கும் இடையிலான முரண்பாடுகள் துரதிருஷ்டவசமானவை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் கூறியுள்ளார். 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய பேட்டிங் திறமையால் பல்வேறு சாதனைகளை மின்னல் வேகத்தில் நிகழ்த்தி வருகிறார். கேப்டன் பொறுப்பிலும், பேட்டிங்கிலும் புதிய மைல்கல்களை எட்டி வருகிறார். இருப்பினும், அவர் நடந்து கொள்ளும் விதத்தினால், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அது அணிக்கு வெளியே இருப்பவர்களிடம் மட்டுமல்ல வெளியேயும் வெளிப்படுகிறது. 

அதற்கு முக்கியமான ஒரு உதாரணமாக இருந்து வருவது கும்ளே உடனான சர்ச்சைக்குரிய அந்த காலம். இந்திய அணியின் பயிற்சியாளராக 2016ம் ஆண்டு ஜூன் 23ல் அனில் கும்ப்ளே ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதன் முதலில் அவர் பங்கேற்றது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர்தான். 2-0 என்ற கணக்கில் அந்த தொடரை வென்ற இந்திய அணி, அதன் பிறகு நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் தொடர்ச்சியாக கைப்பற்றியது. வெற்றிகரமான பயிற்சியாளராக தான் கும்ளே வலம் வந்தார். 

ஆனால், விராட் கோலிக்கும், கும்ளேவுக்கும் இடையே காலப்போக்கில் விரிசல் ஏற்பட்டது. சகஜமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு, இருவரிடையே சுமுகமான உறவு இல்லாமல் போனது. தனக்குரிய உரிமைகளில் அனில் கும்ப்ளே தலையிடுகிறார் என கேப்டன் விராட் கோலி நினைத்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்த கருத்து வேறுபாடு முற்றியது. ஒரு வருடம் முடிந்த பின்னரும், கும்ளேவையே பயிற்சியாளராக நியமிக்க சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் ஆலோசனைக் குழு முன் வந்தது. ஆனால், கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாட்டால் கும்ளே பதவி விலகும் முடிவை எடுத்தார்.

இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டின் வீச்சினை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பிசிசிஐக்கு கும்ளே எழுதிய கடிதத்தை கவனித்தால் தெரியும். “விராட் கோலி எனது பயிற்சிமுறைகள் மீதும், தொடர்ந்து நான் பயிற்சியாளராக நீடிப்பது குறித்தும் மாற்றுக் கருத்துகள் இருந்ததாக பிசிசிஐ எனக்கு தெரிவித்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் நான் எப்போதும் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோருக்கு இடையேயான வரம்புகளை மதிப்பவன்.

பிசிசிஐ எனக்கும், விராட் கோலிக்கும் இடையே இருக்கும் பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்க்க, தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தது. ஆனால் இந்தக் கூட்டணியை இனி ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறியதால், நான் வெளியேறுவதுதான் சிறந்த நேரம் இதுதான் எனக் கருதினேன்” என்று வெளிப்படையாக பேசியிருந்தார். கும்ளே விலகி செல்ல ரவிசாஸ்திரி அந்த இடத்திற்கு வந்தார். 

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விவிஎஸ் லஷ்மண், கோலிக்கும், கும்ளேவுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவிய அந்த தருணங்களில் ஏற்பட்ட தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். லஷ்மண் பேசுகையில், “விராட் கோலி தன்னுடைய எல்லையை தாண்டிவிட்டார் என்று நினைக்கவில்லை. ஆலோசனை குழுவில் இருந்த நாங்கள் அனில் கும்ளே தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் தொடர வேண்டுமென நினைத்தோம். ஆனால், பதவியில் இருந்து விலகுவதுதான் சரியான முடிவு என நினைத்து விலகிவிட்டார். இது லேசான சங்கடத்தை ஏற்படுத்தியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது கும்ளேவுக்கு இருந்த அழுத்தத்தை நான் விரும்பவில்லை. நடந்தவை அனைத்து துரதிருஷ்டவசமானவை. ஆலோசனைக் குழு ஒன்றும் திருமணத்திற்கான கவுன்சிலர்கள் போன்றது அல்ல. சிறப்பான முறையில் தேர்வு செய்வதுதான் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி. திறந்த மனதுடன் நாங்கள் அதனை செய்தோம். எதிர்பாராத விதமாக விராட் கோலிக்கும் அனில் கும்ளேவுக்கும் ஒத்துவரவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com