இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. பல்லேகேலே மைதானத்தில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் இலங்கை அணி என்னதான் கடினமாக சண்டையிட்டாலும், முக்கியமான நேரத்தில் போட்டியை தங்கள் வசப்படுத்திய இந்திய அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பல்லேகேலே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விரைவாகவே 4 விக்கெட்டுகளை இழந்து போராடிவருகிறது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அதேபோல தற்போது நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான தொடர்களில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்கிடைக்கவில்லை.
இந்நிலையில் “திறமையான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது, ஒருநாள் போட்டியில் இடம்கிடைத்தால் டி20 அணியில் இடம்கிடைப்பதில்லை, டி20 போட்டியில் இடம்கிடைத்தால் ஒருநாள் அணியில் இடம்கிடைப்பதில்லை” என ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வழங்கி வந்தனர்.
ஆனால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டாகி வெளியேறியுள்ளார் சஞ்சு சாம்சன். ஏற்கனவே அணியில் ருதுராஜ் முதலிய வீரர்களுக்கு இடமில்லை என்ற விமர்சனம் இருந்துவரும் நிலையில், ‘கிடைத்த வாய்ப்பிலும் இப்படி மோசமாக செயல்பட்டால் என்ன செய்வது?’ என சாம்சனின் ரசிகர்கள் ஆதங்கமடைந்துள்ளனர்.
சஞ்சு சாம்சனின் மோசமான செயல்ப்பாட்டை விமர்சித்திருக்கும் சில கிரிக்கெட் ரசிகர்கள், “விரைவில் ஓய்வை பெற வாழ்த்துக்கள் சஞ்சு சாம்சன்” என்றும், “உங்களுடைய வாய்ப்பை நீங்களாகவேதான் கைவிடுகிறீர்கள், இனி உங்களை டி20 வடிவத்திலும் பார்ப்பது கடினம்” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
20 ஓவர்கள் முடிவில் 137 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி. இலங்கை அணிக்கு 138 அணிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.