கண்கலங்கிய ரொனால்டோ; கதறி அழுத நெய்மர்! அனுபவ அணிகளின் தோல்விக்கு என்ன காரணம்?

கண்கலங்கிய ரொனால்டோ; கதறி அழுத நெய்மர்! அனுபவ அணிகளின் தோல்விக்கு என்ன காரணம்?
கண்கலங்கிய ரொனால்டோ; கதறி அழுத நெய்மர்! அனுபவ அணிகளின் தோல்விக்கு என்ன காரணம்?
Published on

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் உலகின் தலைச்சிறந்த அணிகள் ஏன் தோல்வியை தழுவியது....

உலகின் தலைச்சிறந்த அணிகளாக கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரேசில், ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்ற அணிகள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்களின் கோப்பை கனவை தவுடுபொடியாக்கியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை விரிவாக காணலாம்.

லீக் சுற்றுடன் வெளியேறிய ஜெர்மனி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றின் முதல் போட்டியில் ஜப்பான் அணியுடன் 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வி. இரண்டாவது போட்டியில் ஸ்பெயின் அணியுடன் 1:1 என்ற கோல் கணக்கில் டிரா. கோஸ்டாரிகா அணியுடன் 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி. ஆக மொத்தம் ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியோடு 3 புள்ளிகளை பெற்ற ஜெர்மனி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்த ஸ்பெயின்

லீக் சுற்று போட்டியில் கோஸ்டாரிகா அணியுடனான முதல் ஆட்டத்தில் 7:0 என்ற கோல் கணக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஸ்பெயின், ஜெர்மனி அணியுடனான தனது இரண்டாவது ஆட்டத்தில் 1:1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. ஜப்பான் அணியுடன் நடந்த கடைசி லீக் சுற்று போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவினாலும் கோல் கணக்கில் ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிக்கு முன்னேறியது. ஆனால், மொராக்கோ அணியுடனான இந்த போட்டியில் 3:0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

வீணான நெய்மரின் அனுபவ ஆட்டம்

உலக கால்பந்து தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பிரேசில் அணி உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் சுற்று போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வென்ற பிரேசில், சுவிட்சர்லாந்து அணியுடனான போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற லீக் சுற்றின் 3-வது போட்டியில் கேமரூன் அணியுடன் 1:0 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியபோதும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் ஜப்பான் அணியுடன் களம்கண்ட பிரேசில், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து குரோஷியா அணியுடனான காலிறுதி போட்டியில் எளிதாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெறும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், குரோசியா அணியிடம் படுதோல்வி அடைந்து காலிறுதி போட்டியுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

கனவாகிப்போன ரொனால்டோவின் கோப்பை கனவு

போர்ச்சுக்கல் அணி கானா அணியுடன் முதல் லீக் சுற்றுப் போட்டியில் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற உருகுவே அணியுடன் நடைபெற்ற இரண்டாவது லீக் சுற்றுப் போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி லீக் சுற்றுப் போட்டியில், தென் கொரியா அணியிடம் 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

இதையடுத்து நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியுடன் மோதிய போர்ச்சுக்கல் 6:1 என்ற கோல் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக களமிறங்கிய போர்ச்சுக்கல் வீரர் ராமோஸ் 3 கோல்களை அடித்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் காலிறுதிப் போட்டியில் களமிறங்கிய போர்ச்சுக்கல் அணி, 1:0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திரங்களைக் கொண்ட பிரபலமான அணிகள் காலிறுதி போட்டியுடன் வெளியேற முக்கிய காரணமாக கொரோனா பெருந்தொற்றை சொன்னாலும் கூட இது மட்டும் காரணம் இல்லை என்பது கால்பந்து ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

பெரிய அணிகளின் தோல்விக்கு கொரோனா காரணமா?

சிறந்த அணிகளான இத்தாலி, ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகள் கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல உயிரிழப்புகளையும் சந்தித்தன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வீரர்கள் மீண்டுவர மிகவும் சிரமப்பட்டனர். அதேபோல் போதிய பயிற்சியும் இல்லை என சொல்லலாம். வேவ்வேறு அணிக்காக விளையாடும் வீரர்கள் இணைந்து விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அனுபவ வீரர்களின் ஆட்டம் கை கொடுத்ததா?

தோல்விக்கு கொரோனா தொற்று ஒரு காரணமாக இருந்தாலும். மூத்த அனுபவ வீரர்களின் அசால்ட்டான ஆட்டமும் தோல்விக்கு காரணம் என சொல்லலாம். வயது முதிர்ச்சி காரணமாக எதிர் அணியில் விளையாடும் இளம் வீரர்களுக்கு இணையாக விளையாட முடியாமல் மூத்த அனுபவ வீரர்கள் திணறியதை காண முடிந்தது. ஆனால், ஒருசில நேரங்களில் இவர்களின் அனுபவ ஆட்டம் பிரகாசமாக இருந்ததும் உண்மை.

சிறிய அணி என எண்ணி தோல்வியடைந்த பெரிய அணிகள்

சின்ன பாம்பாக இருந்தாலும் பெரிய குச்சியைக் கொண்டு அடிக்க வேண்டும் என்பார்கள். அதுபோலதான் கால்பந்து போட்டியும். எதிர் அணியை சிறிய அணி என எண்ணாமல் பெரிய அணிகள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே சிறிய அணியையும் வெல்ல முடியும், இதற்கு உதாரணமாக, கேமரூன், தென் கொரியா, சவூதி அரேபியா, ஜப்பான், மொராக்கோ போன்ற அணிகள் உலகின் தலைசிறந்த அணிகளை வென்றுகாட்டியதை உதாரணமாகக் கொள்ளலாம்.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட பிரேசில் அணி காலிறுதி போட்டியில் முழு திறமையுடன் விளையாடவில்லை, அணியின் தோல்விக்கு காரணம் அணி வீரர்களே. பிரேசில் தோற்றால் தோற்கட்டும் எங்களுக்கு ஒன்னும் கவலையில்லை என கவலையுடன் ரசிகர்கள் சொன்னது கவலையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com