IND vs SL: இறுதிவரை விட்டுக்கொடுக்காத இலங்கை அணி.. சமனில் முடிந்த போட்டி! ஏன் சூப்பர் ஓவர் இல்லை?
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. பல்லேகேலே மைதானத்தில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்ற இந்திய அணி, டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பிரமதேச மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் முன்னிங்ஸ் முடிவில் 230 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 231 ரன்களை எடுக்க முடியாமல் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் போட்டி சமனில் முடிந்தது.
துரதிர்ஷ்டவசமாக சூப்பர் ஓவர் இல்லாத நிலையில், சூப்பர் ஓவர் வரும் என நினைத்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஏன் சூப்பர் ஓவர் இல்லை என்பதற்கான விளக்கத்தை கீழே பார்க்கலாம்..
கடைசி விக்கெட்டில் சொதப்பிய அர்ஷ்தீப்.. சமனில் முடிந்த போட்டி!
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய இந்திய அணி விக்கெட் வேட்டை நடத்தியது. 101 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இலங்கை இழந்த போதிலும் தொடக்க வீரர் நிசாங்கா 56 ரன்கள் மற்றும் இறுதியாக வந்து சிறப்பாக ஆடிய துனித் 67 ரன்கள் என அடிக்க இலங்கை அணி 230 ரன்கள் சேர்த்தது.
231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணியில், ரோகித் சர்மா அபாரமாக விளையாடி அரைசதமடித்து அசத்தினார். ஆனால் ரோகித் சர்மா 58 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறிய நிலையில், அதற்குபிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த இந்திய அணி 197 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைமைக்கு சென்றது.
கடினமான சூழலில் பேட்டிங்கிற்கு வந்த ஷிவம் துபே இறுதிவரை களத்தில் நின்று 25 ரன்கள் அடித்து போட்டியை வெற்றியின் அருகாமைக்கு எடுத்துச்சென்றார். இந்திய 230 ரன்கள் அடித்து போட்டியை சமன்செய்த பிறகு வெற்றிபெற 1 ரன் மட்டுமே தேவையிருந்தது. அப்போது துரதிர்ஷ்டவசமாக LBW மூலம் ஷிவம் துபே அவுட்டாகி வெளியேற ஆட்டம் தலைகீழாக மாறியது.
இந்தியா வெற்றிபெற 1 ரன் தேவை, இலங்கை போட்டியை சமன்செய்ய 1 விக்கெட் என இருந்தபோது, வந்ததும் வராததுமாய் பேட்டை காற்றில் சுழற்றிய அர்ஷ்தீப் சிங்கும் அவுட்டாக முதல் ஒருநாள் போட்டியை இலங்கை அணி சமன் செய்தது.
போட்டி சமனில் முடிந்தபோதும் ஏன் சூப்பர்ஓவர் இல்லை..?
பரபரப்பாக சென்ற போட்டி சமனில் முடிந்த பிறகு பெரும்பாலான ரசிகர்கள் சமன் ஆனால் என்ன எப்படியும் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றிவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலங்கை-இந்தியா அணிகள் போட்டியில் சூப்பர் ஓவர்முறை பின்பற்றப்படவில்லை.
தெரியாதவர்களுக்கு, ஐசிசி விளையாட்டு நிபந்தனைகளின் படி ஒவ்வொரு டி20 போட்டியும் சமனில் முடிவடையும் போது சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் அதேமுறை ஒருநாள் போட்டிகளில் பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை. ஒருநாள் போட்டியை பொறுத்தவரையில் உலகக்கோப்பை முதலிய பெரிய தொடர்கள் மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட கலந்துகொள்ளும் தொடர்களில் பின்பற்றப்படுகிறது. அதையும் தான்டி இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் ஒருநாள் தொடரில் சூப்பர் ஓவர் முறை வைத்துக்கொள்ள வேண்டுமானால், இரண்டு அணிகளின் வாரியமும் சேர்ந்து அந்த முடிவை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
இன்றுவரை, மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டுமே சூப்பர் ஓவரைக் கண்டுள்ளன. அதில் எல்லோருக்கும் பரிட்சயமான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டி உதாரணம். அந்த ஆட்டத்தில் தான் முதல்முறையாக சூப்பர் ஓவர் முறை ஒருமுறை நடத்தப்பட்டது.
கடைசியாக நடந்த ஒருநாள் போட்டி சூப்பர் ஓவர் என்றால், 2023 ஒருநாள் உலகக்கோப்பை குவாலிஃபயர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிபெற்றது.
உலகக்கோப்பை அல்லாமல் நடைபெற்ற ODI சூப்பர் ஓவர்..
உலகக்கோப்பை முதலிய பெரிய தொடர்கள் அல்லாமல் நடந்த ஒருநாள் போட்டியிலும் சூப்பர் ஓவர் முறை நடத்தப்பட்டுள்ளது. 2020 பாகிஸ்தான் - ஜிம்பாப்வே இரண்டு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்த போது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு, அதில் ஜிம்பாப்வே அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. ஒவ்வொரு தொடருக்கு ஏற்ப விதிமுறைகள் மாறுபடுகின்றன, ஒருவேளை இரண்டு வாரியங்கள் சம்மதித்தால் சூப்பர் ஓவர்முறை பின்பற்றப்படுகிறது.
இந்தியா இலங்கை போட்டி சமனில் முடிந்தபோதும் ஏன் சூப்பர் ஓவர் இல்லை என குழப்பமடைந்த ரசிகர்கள், பாகிஸ்தான் - ஜிம்பாப்வே போட்டியை உதாரணமாக காட்டி சூப்பர் ஓவர் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.