ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு அடுத்து மிகவும் பிரபலமான டெஸ்ட் தொடர் என்றால், இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் தான். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தொடர் நடப்பாண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவிருக்கிறது.
கடந்தாண்டு வரை 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்டு வந்த பார்டர் கவாஸ்கர் தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அதிரடியான முடிவுகளையொட்டி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது.
32 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 5 டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றன. ரசிகர்களின் கவனத்தை பெற்ற தொடர் என்பதால் 5 போட்டிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது.
போட்டி அட்டவணையின் அறிவித்திருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நவம்பர் 22-ம் தேதி தொடங்கி ஜனவரி 7-ம் தேதி வரை 5 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி,
முதல் போட்டி - பெர்த் மைதானத்தில் நவம்பர் 22 - நவம்பர் 26ம் தேதி வரை
இரண்டாவது போட்டி - அடிலைடில் டிசம்பர் 6-ம் - டிசம்பர் 10-ம் தேதி வரை (பகலிரவு போட்டி)
மூன்றாவது போட்டி - பிரிஸ்பேனில் டிசம்பர் 14 - டிசம்பர் 18ம் தேதி வரை (GABBA மைதானம்)
நான்காவது போட்டி - மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26 - டிசம்பர் 30 வரை (பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி)
5வது போட்டி - சிட்னியில் ஜனவரி 3 - ஜனவரி 7ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது
கடந்த 8 ஆண்டுகளில் நடத்தப்பட்ட 4 பார்டர் கவாஸ்கர் தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு கடைசியாக இரண்டுமுறை சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, இரண்டுமுறையும் தொடரை வெற்றி அசத்தியது.
கப்பாவில் ஏற்பட்ட தோல்விகுறித்து பேசியிருந்த பாட் கம்மின்ஸ், இந்திய அணி எங்களை கப்பாவில் வீழ்த்தியது பெரிய வலியை எங்களுக்கு கொடுத்தது என்று தெரிவித்திருந்தார். நடப்பாண்டும் வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா? அல்லது சாதனையை தடுத்து நிறுத்துமா ஆஸ்திரேலியா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.