குடியுரிமை திருத்த மசோதா: திரிபுரா, அஸாமில் வன்முறை; விரைந்தது ராணுவம்

குடியுரிமை திருத்த மசோதா: திரிபுரா, அஸாமில் வன்முறை; விரைந்தது ராணுவம்
குடியுரிமை திருத்த மசோதா: திரிபுரா, அஸாமில் வன்முறை; விரைந்தது ராணுவம்
Published on

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுரா, அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இதன் காரணமாக போராட்டத்தை கட்டுப்படுத்த திரிபுரா, அஸாமுக்கு ராணுவம் விரைந்துள்ளது.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில், இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். 

இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலானோர் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறி உள்ளனர். இவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறபோது, தங்கள் நலன் பாதிக்கப்படும் என அந்த மாநில மக்கள் எதிர்க்கின்றனர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் நேற்று 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. 

இதன் காரணமாக வன்முறை காரணமாக  திரிபுராவில் இணையதள சேவை, மற்றும் செல்போன் குறுஞ்செய்தி சேவை ஆகியவை 48 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளன. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அஸாமில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அரசுப் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 

அஸாம் மாநிலத்தில் லக்கிம்பூர், டின்சுகியா, தேமாஜி, திப்ருகார், சராய்டியோ, சிவசாகர், ஜோர்ஹாட், கோலாகாட், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கம்ரூப்   10 மாவட்டங்களில் நாளை காலை 7 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை அடக்க திரிபுராவில் 2 ராணுவ படைகளும் அஸாமில் ஒரு ராணுவ படையும் விரைந்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com