'சீனியர், ஜூனியர், பெண்கள்' - கடைசி நேரத்தில் கோட்டைவிட்டு கவலை அளித்த இந்தியா..!

'சீனியர், ஜூனியர், பெண்கள்' - கடைசி நேரத்தில் கோட்டைவிட்டு கவலை அளித்த இந்தியா..!
'சீனியர், ஜூனியர், பெண்கள்' - கடைசி நேரத்தில் கோட்டைவிட்டு கவலை அளித்த இந்தியா..!
Published on

சர்வதேச ‌உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இறுதிக் கட்டம் வரை போராடி முன்னேறும் இந்திய அணி முக்கியப் போட்டிகளில் தோல்வியடைந்து கோப்பைகளை தவறவிட்டு வருகிறது. கனவுக் கோப்பைகளுக்கான காத்திருப்பு தொடர்கதையாகியே வருகிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி உலகக்கோப்பை என்பது என்றுமே தீரா தாகம். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு மட்டுமே நடைபெறும் இப்போட்டிகளை வென்று கோப்பைகளை கைகளில் தவ‌ழ வைக்க அணிகள் நடத்தும் பலப்பரீட்சைகள் கடினமானவை. அவ்வாறு சவாலான பலப்பரீட்சைகள் நடத்தியும், ஓராண்டுக்குள் இந்தியா தவற விட்டுள்ள கோப்பைகள் மூன்று. ஆடவர் ஒரு நாள் உலகக்கோப்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை, மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை என மூன்றையும் இந்திய அணி இறுதிக்கட்டங்களில் நழுவ விட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019-ஆம் ஆண்டு மே இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை பரபரப்பாக நடைபெற்றது ஆடவர் உலகக்கோப்பை தொடர். தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்துடன் போராடித் தோல்வியடைந்தது. தோனிக்கு பிறகு கோலி தலைமையில் கோப்பை வசமாகும் என்ற ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவு, இன்னிங்ஸின் முதல் அரைமணி நேர மோசமான ஆட்டத்தால் தகர்ந்தது.

சீனியர்கள் தவற விட்ட கோப்பையை ஜூனியர்கள் பிரிவில் இளம் சிங்கங்கள் வென்றெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை மீது படர்ந்தது. தொடரில் வலுவான அணியா‌க வலம் வந்த இந்தியப்படை, வங்கதேச அணியுடனான இறுதிப்போட்டியில் சொதப்பியது. இறுதி வரை போராடியும் கோப்பையை முத்தமிட முடியாமல் தாயகம் திரும்பியது இளையோர் படை.

ஆண்கள் பிரிவில் கோப்பைகள் தவறினாலும், பெண்கள் இருபது ஓவர் உலகக்கோப்பையை வாகை சூடி ஜொலிப்பார்கள் என்ற எதி்ர்பார்ப்பு உச்சம் பெற்றது. எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இறுதிப்போட்டிக்குள் சிங்க நடையிட்டு நுழைந்தது இந்திய மங்கையர் படை. வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் வழக்கமான ஆட்டத்தில் சுளிவு கண்டது இந்தியா. சொந்த மண் மக்கள் மத்தியில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலியாவிடம், 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்தியா.

இம்மூன்று உலகக்கோப்பை தொடர்களிலுமே கிரிக்கெட் வல்லுநர்களால் கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்பட்ட அணிகளில் முதன்மை பெற்றிருந்தது இந்தியா. இருப்பினும் முக்கிய கட்டங்களில் கோப்பையை கோட்டை விடு‌வது ரசிகர்ளுக்கு கவலையளிக்கும் விதமாக உள்ளது. இவ்வாறான சூழல்களில் நடைபெறவிருக்கும் ஆடவர் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் வியூகங்களை சரிவர வகுத்து ரசிகர்களின் கோப்பை தாகத்தை இந்திய அணி தணிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com