'ரிஷப் பன்ட் விஷயத்தில் அவசரப்படாதீர்கள்' கில்கிறிஸ்ட் யோசனை

'ரிஷப் பன்ட் விஷயத்தில் அவசரப்படாதீர்கள்' கில்கிறிஸ்ட் யோசனை
'ரிஷப் பன்ட் விஷயத்தில் அவசரப்படாதீர்கள்' கில்கிறிஸ்ட் யோசனை
Published on

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே வென்றுவிட்டது. இப்போது கடைசி டெஸ்ட் போட்டி ஒவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சுற்றுப் பயணத்தில் இந்திய அணி இரண்டு விக்கெட் கீப்பர்களை அணியில் சேர்த்தது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடினார். தினேஷ் கார்த்திக்கின் சொதப்பலான ஆட்டம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டார். அந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பான விக்கெட் கீப்பிங் செய்த பன்ட், தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 2 ஆவதப பந்திலேயே சிக்ஸர் விளாசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த டெஸ்ட் போட்டியையும் இந்தியா வென்றது.

இதனையடுத்து பன்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. நான்காவது டெஸ்ட் போட்டியில் பன்ட் அவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. மேலும் இந்தியா அந்தப் போட்டியிலும் தோற்றது. இதன் காரணமாக பன்ட் தொடர்ந்து அணியில் நீடிப்பாரா இல்லையா தோனிக்கு பின்பு பன்ட் மட்டுமே இந்தியாவின் அடுத்த சாய்ஸா என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பன்ட்க்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான ஆடம் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார்.

அதில் "ரிஷப் பன்ட் மிகப் பிரமாதமான வீரர். அவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்க வேண்டும். அவருக்கு 20 வயதுதான் ஆகிறது. எனவே பன்ட் விஷயத்தில் தேர்வு வாரியம் அவசரப்படாமல் மிக கவனமாக கையாள வேண்டும். இப்போது அவரை அணியில் இருந்து எடுத்துவிட்டால். இளம் வீரரான பன்ட்டின் மனதில் ஒரு பயம் ஏற்படும். பன்டக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க வேண்டும், அதே நேரத்தில் பன்ட்டும் சீராக விளையாட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் கில்கிறிஸ்ட்.

மேலும் அவர் "ஆஸ்திரேலியாவில் ஷேன் வார்னே ஓய்வுப் பெற்றப் பின் மற்றொறு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இதுவரை கிடைக்கவில்லை. அதேபோல நான் ஓய்வுப் பெற்ற பின் ஹாடின், மாத்யூ வேட் என பலரும் வந்து சென்றனர். இந்திய அணியில் சச்சின், கங்குலி, திராவிட், லக்ஷ்மன் ஓயவுப் பெற்றப் பின் அவர்களுக்கு ஈடான வீரர்களை தொடர்ந்து இந்தியா தேடி வருகிறது. இப்போது தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து சென்ற பின் தோனிக்கு நிகரான வீரரை இந்திய அணி தேடி வருகிறது. இவ்வாறு ஒரு மிகப்பெரிய வீரர் ஓய்வுப் பெற்ற பின்பு மாற்று வீரரை தேடுவது சிரமம்தான். இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இந்தியா நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடும்" என கில்கிறிஸ்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com