எனக்கு நேராக விளையாடவும் வாழவும் கற்றுக்கொடுத்தவர் நீங்கள் சச்சின் உருக்கம்

எனக்கு நேராக விளையாடவும் வாழவும் கற்றுக்கொடுத்தவர் நீங்கள் சச்சின் உருக்கம்
எனக்கு நேராக விளையாடவும் வாழவும் கற்றுக்கொடுத்தவர் நீங்கள்  சச்சின் உருக்கம்
Published on

உலகக் கிரிக்கெட்டின் ஈடு இணையற்ற கிரிக்கெட் ஜாம்பவனாக அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் அவர் செய்யாத சாதனைகளே இல்லை. அந்தச் சாதனைகளை முறியடிக்கவே இப்போதுள்ள இளம் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக்கொண்டு விளையாடி வருகின்றனர். அப்படிப்பட்ட சாதனையாளரை உறுவாக்கியவர் சச்சினின் சிறுவயது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கர். ஆம் ஒரு சச்சின் ஒரு மிகப்பெரிய பேட்ஸ்மேனாக அறியப்படுவதற்கு விதை போட்டவர் ரமாகாந்த் அச்ரேக்கர். இதனை சச்சின் டெண்டுல்கர் என்றுமே மறந்ததில்லை. ஆனால் இப்போது சச்சினுடைய பயிர்சியாளர் இவ்வுலகில் இல்லை. ஆம் ரமாகாந்த் ஆச்ரேக்கர் நேற்று மாலை மறைந்துவிட்டார்.

துரோணாச்சாரியா விருதினை வென்றுள்ள ரமாகாந்த் அச்ரேகர் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் மட்டுமின்றி வினோத் காம்ப்ளி, பிரவீன் ஆம்ரே, சமீர் டீகே மற்றும் பல்வீந்தர் சிங் சந்து உள்ளிட்டோருக்கும் பயிற்சியளித்துள்ளார். ரமாகாந்த் அச்ரேக்கருக்கு வயது 87. சச்சின் டெண்டுல்கர் சிறுவயதில் அவரிடம் பயிற்சி மேற்கொண்டாலும், பின்பு மிகப் பெரிய புகழ் பெற்றாலும் கூட தனது பயிற்சியாளரை ஒருபோதும் மறந்ததில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட செல்லும் முன்பு, மும்பையில் இருக்கும் ரமாகாந்த் அச்ரேக்கர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசி வாங்குவது வழக்கம்.

எவ்வளவு வேலை இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்துவிடுவார் அவர். ரமாகாந்த் அச்ரேக்கரின் இறுதி நாள்களில் கூட சில மாதங்களுக்கு முன்பு சச்சின் அவரை சந்தித்து உரையாற்றியுள்ளார். பலமுறை தனது குரு குறித்து பேசியுள்ளார் அவர். அதில் முக்கியமானது சில மாதங்களுக்கு முன்பு சச்சின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம் "சிறு வயதில் நான் ஜிம்கானா மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்போது எனது பயிற்சியாளராக இருந்த ரமாகாந்த் அச்ரேக்கர், நான் பேட் செய்யும்போது எனது ஸ்டெம்புக்கு மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைப்பார். நான் எதிர்கொள்ளும் பந்தில் அவுட்டாகவிட்டால் அந்த நாணயத்தை நான் எடுத்துக் கொள்ளலாம். அப்படி நான் சேகரித்த நாணயங்கள் விலை மதிக்க முடியாதவை. அவையனைத்தும் எனக்கு மிக முக்கியமானவை" என்றார் சச்சின்.

அதேபோல ரமாகாந்த் அச்ரேக்கர் மிகவும் கண்டிப்பான பயிற்சியாளர் என்று குறிப்பிட்டு மற்றொரு சம்பவத்தையும் கூறினார் அது " ஒருமுறை ரமாகாந்த் அச்ரேக்கர் சார் இல்லை என நினைத்து, பயிற்சிக்கு செல்லாமல் மைதானத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, திடீரென வந்த சார், பயிற்சி செய்யாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என கேட்டு கன்னத்தில் பளார் என அறைவிட்டார். அதிலிருந்து நான் ஒரு நாள் கூட பயிற்சி செய்யாமல் இருந்ததில்லை" என்றார் சச்சின். இப்படி தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ரமாகாந்த் அச்ரேக்கரை நினைவுக் கூர்ந்துக்கொண்டே இருந்தார் சச்சின்.

இப்போது தன் ஆதர்சன குரு இறந்த பின்பு ட்விட்டரில் நெகிழ்ச்சியாக நினைவுக் கூர்ந்துள்ளார் அவர் " அச்ரேகர் சாரின் வருகையால் சொர்கத்தில் கிரிக்கெட் வளம் பெறப்போகிறது. என் கிரிக்கெட் வாழ்க்கையின் ஏபிசிடிக்களை அவர்தான் கற்றுக்கொடுத்தார். அவருடைய நிறைய மாணவர்களைப் போல் நானும் அவருடைய வழிகாட்டுதலின் படியே கிரிக்கெட்டின் பயின்றேன். எனது வாழ்க்கையில், அவருடைய பங்களிப்பை வார்த்தையால் அடக்கமுடியாது. அவர் கட்டமைத்த அடித்தளத்தில் தான் நான் நிற்கின்றேன். கடந்த மாதம் கூட அவரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன். சார் எனக்கு நீங்கள் நேராக எப்படி விளையாடுவது எப்படி என கிரிக்கெட்டில் மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை, வாழ்கையிலும்தான்" என பகிர்ந்துள்ளார்.
  


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com