தள்ளுமுள்ளு, வாகனம் கோளாறு... தடங்கல்களைத் தாண்டி பரப்புரையைத் தொடங்கிய ஓபிஎஸ்!

தள்ளுமுள்ளு, வாகனம் கோளாறு... தடங்கல்களைத் தாண்டி பரப்புரையைத் தொடங்கிய ஓபிஎஸ்!
தள்ளுமுள்ளு, வாகனம் கோளாறு... தடங்கல்களைத் தாண்டி பரப்புரையைத் தொடங்கிய ஓபிஎஸ்!

கூட்டத்தில் தள்ளுமுள்ளு, பரப்புரை வாகனத்தில் கோளாறு என பல்வேறு தடங்கல்களைத் தாண்டி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

தமிழக துணை முதல்வரும, தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் பகுதியில் இருந்து தனது முதல் பரப்புரையை புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், பரப்புரை துவங்குவதற்கு இரவு 8 மணிக்கும் மேலாகிவிட்டது. பல்வேறு தடைகளுக்குப்பின் தனது முதல் பரப்புரையை அவர் துவங்கினார்.

முதலாவதாக, பரப்புரைக்கு வருவதற்குமுன் போடிநாயக்கனூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகக் கூடத்தில் ஒரு சமூகத்தினரிடம் வாக்கு சேகரித்தார். இதையறிந்த அதே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர், அந்த சமூக கூடத்தின் முன் முற்றுகையிட்டு ஓபிஎஸ்ஸுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

கூட்டத்தை விலக்க முயன்ற போலீசாருக்கும் முற்றுகைகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த சமூக கூடத்திலிருந்து ஓபிஎஸ் வெளிவர முடியாத நிலை உருவானது. பின்னர், ஒருவழியாக முற்றுகையை விலக்கி, ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பின் ஓபிஎஸ் போடியில் இருந்து கிளம்பினார்.

முல்லை நகரில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பரப்புரைக்கு தயாராக இருந்த வேனில் ஏறிச் சொல்ல தயாரானார். வாகனத்தை ஓட்டுநர் இயக்கியபோது வேன் இயங்க மறுத்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரப்புரை வேனின் ஏசியை ஆன் செய்து வைத்திருந்ததால் வாகனத்தின் பேட்டரி வீக் ஆகி வாகனம் இயங்க மறுத்தது தெரியவந்தது.

அதனால், வேனிற்குப் பதில், திறந்தவெளி ஜீப்பை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் பரப்புரை வேனின் ஓட்டுநர் வேனை இயக்கிவிட்டார். இதனால் ஜீப்  கைவிடப்பட்டு, திட்டமிட்டபடியே பரப்புரை வேனுக்குள் ஏறி தனது முதல் பரப்புரையை துவக்கும் அரண்மனை புதூர் பகுதிக்கு வேனிலேயே கிளம்பிச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.

அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ், பரப்புரை வேனில் இருந்து திறந்தவெளி ஜீப்புக்கு மாறி தனது முதல் பரப்புரையை மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின் துவக்கினார்.

தனது முதல் பரப்புரை தாமதமானாலும், தடங்கல்கள் பல ஏற்பட்டாலும், தனது வழக்கமான மகிழ்ச்சியுடனும் புன்சிரிப்புடனும்
காலதாமதத்தை கருத்தில் கொள்ளாது இயல்பான பரப்புரையை துவக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com