முண்டக்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேப்பாடி மயானத்தில் தனது பேத்தி ஆண்ட்ரியாவின் உடலை தகனம் செய்துவிட்டு அடுத்த 15 நிமிடங்களில் தனது மகன் பிரசோபின் உடலை தகனம் செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறார் கருப்பையா.
கருப்பையாவும் ஜோதியும் அன்றைய நாள் மேப்பாடியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்குவதற்காக சென்றதால் இருவரும் உயிர் தப்பிய நிலையில் அவர் குடும்பத்தில் உள்ள 11 பேரில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மண்சரிவில் குடும்பத்தை இழந்த கருப்பையா கூறுகையில், “என் குடும்பத்தில் மகன், பேத்தி, மருமகள், உறவினர்கள் 10 முதல் 12 பேர் இறந்துவிட்டனர். வீடு இருக்கும் இடம் தெரியவில்லை. நாங்கள் என் மகள் வீட்டிற்கு சென்றுவிட்டதால் நானும் என் மனைவியும் தப்பிவிட்டோம். என் இன்னொரு மகன் வேறு வீட்டில் இருந்தார். அவர் சாலியாற்றில் அடித்து செல்லப்பட்டுவிட்டார்” என்கிறார் கண்ணீருடன்.
கருப்பையாவின் மனைவி ஜோதி கூறுகையில், “மகனை இழந்துவிட்டேன், பேரப்புள்ளை, மருமகளையும் இழந்துவிட்டேன். எல்லோரையும் இழந்துவிட்டு நிற்கிறேன்” என்றார்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக 50 வருடங்களுக்கு முன்பு வயநாட்டிற்கு சென்ற தமிழர்கள் பலர் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பலர் மண்ணுக்குள் புதைந்து மரணம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் பெயர் பட்டியல், எங்கு சென்று அவர்களின் உடலை புதைக்க வேண்டும் என்கிற விவரங்களை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு அதிகாரியாக அனுப்பப்பட்டுள்ள சமீரன் கவனித்து வருகிறார்.
தமிழக அரசின் சிறப்பு அதிகாரியான சமீரன் ஐஏஎஸ் கூறுகையில், “மேப்பாடிக்கும் மேல்பகுதியில் இருக்கும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய லிஸ்ட்டை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எடுத்துக் கொண்டு இருக்கிறோம். இறந்தவர்களது உறவினர்கள் வந்தால், உடல்களை எடுத்துச் செல்வதகான போக்குவரத்து வசதிகளையும், அல்லது இறுதிச் சடங்கிற்கான போக்குவரத்து வசதிகளையும் மேற்கொண்டு வருகிறோம். முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
வயநாடு அருகே உள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேரும் காணாமல் போய் இருப்பதாக கூறப்படுகிறது. முழுமையாக மீட்புப் பணிகளும் இருப்பிட விவரங்களும் கிடைத்த பின்னரே இழப்புகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரிய வரும்.