குஜராத்தை மிரட்டும் ‘வாயு’ புயல்.. தயார் நிலையில் அரசு...!

குஜராத்தை மிரட்டும் ‘வாயு’ புயல்.. தயார் நிலையில் அரசு...!
குஜராத்தை மிரட்டும் ‘வாயு’ புயல்.. தயார் நிலையில் அரசு...!
Published on

குஜராத் மாநிலத்தை வாயு புயல் இன்று பிற்பகலில் தாக்க உள்ள நிலையில் அங்கு சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசு அமைப்புகள் உடனுக்குடன் தரும் தகவல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு பொது மக்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்தப் புயலின் பாதை சற்றே மாறியிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், குஜராத்தின் தெற்கு பகுதியில் உள்ள வேரவல் மற்றும் மேற்கில் உள்ள துவாரகா இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. அப்போது 155 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டரை எட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடந்த பின்னர் சவ்ராஷ்டிரா, கட்ச் கரையோரம் வாயு புயல் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புயல் பாதிப்புகளை இயன்ற வரை தவிர்க்க குஜராத் அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயலால் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளிலிருந்து 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய கடலோர காவல்படை, கடற்படை மற்றும் விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். விமானங்களும், ஹெலிகாப்டர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபாட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் உள்ள ஐந்து விமான நிலையங்களில் நேற்று நள்ளிரவு முதல் 24 மணி நேரத்திற்கு போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரம் அவசரகால சேவைக்காக சிறப்பு ரயில்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 36 பிரிவுகள் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. படகுகள், மரம் அறுக்கும் கருவிகள், நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் இவர்கள் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதிப்புகளை தவிர்க்க பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் திரும்ப வரவழைக்கப்பட்டு விட்டனர்.

வாயு புயலால் பாதிக்கப்படக் கூடியவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அரசும் உள்ளூர் அமைப்புகளும் அவ்வப்போது தகவல்களை அளித்து வருவதாகவும், புயல் பாதிக்கக்கக்கூடிய பகுதிகளில் இருப்பவர்கள் அதை பின்பற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com