சாதி சான்றிதழ் சர்ச்சை: நவ்னீத் கெளருக்கு எதிரான தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

சாதி சான்றிதழ் சர்ச்சை: நவ்னீத் கெளருக்கு எதிரான தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை
சாதி சான்றிதழ் சர்ச்சை: நவ்னீத் கெளருக்கு எதிரான தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை
Published on

நடிகை நவ்னீத் கவுர் தனித்தொகுதியில் போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சாதி சான்றிதழை ரத்து செய்து 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘அரசாங்கம்’ படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை நவ்னீத் கெளர். அதனைத்தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர், கடந்த 2011 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை திருமணம் செய்துகொண்டார். அரசியல்வாதியை திருமணம் செய்ததால், கடந்த 2014 ஆம் ஆண்டு அமராவதி மக்களவை தனித்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர், மீண்டும் அதே தொகுதியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாகவே நின்று வெற்றி பெற்றார்.

ஆனால்,  ”அமராவதி தனித்தொகுதியில் பட்டியலினத்தவர் என்று போலியாக சாதி சான்றிதழ் காட்டி நவ்னீத் கெளர் வெற்றி பெற்றுள்ளார். நவ்னீத் பஞ்சாபில் இருந்து வந்தவர்.மகாராஷ்டிராவில் எஸ்.சி பிரிவிவின் கீழ் வராத லபானா சமூகத்தைச் சேர்ந்தவர். தேர்தலுக்காக தனது சாதி சான்றிதழை போலியாக பள்ளியின் போலி ஆவணங்களைக் காட்டி பட்டியலினப் பெண் என்று சான்றிதழ் வாங்கிவிட்டார்” என்று சிவசேனா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ராவ் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கின் விசாரணையில் இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நவ்னீத் கெளரின் சாதி சான்றிதழை ரத்து செய்ததோடு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

 ”இந்த நாட்டின் குடிமகளாக நீதிமன்றத்தின் உத்தரவை நான் மதிக்கிறேன். அதேசமயம், நான் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று அதிரடியாக அறிவித்தார் நவ்னீத் கெளர். அதன்படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஷ்வரி அமர்வில் வந்தபோது நவ்னீத் கெளர் சார்பாக வழக்கறிஞர் ரோஹத்கியும், வழக்கு தொடர்ந்த ஆனந்த் ராவ் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலும் வாதாடினார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நவ்னீத் கெளர் வழக்கில் தீர்ப்பளித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்துள்ளனர். இதனால், பறிக்கப்பட இருந்த நவ்னீத் எம்.பி பதவி தப்பியுள்ளது. ஆனால், வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com