ரத்து செய்யப்பட்ட பிரிவில் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ-வில் வழக்குப்பதிவு செய்வதை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டப்பிரிவின்கீழ் வழக்குத் தொடரப்பட்டு வருவதாகவும், இதற்கு உச்ச நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 5ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிரிவின்கீழ் எப்படி வழக்குப்பதிவு செய்கிறீர்கள் என நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
காவல்துறை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்களிடம்தான் கேட்கவேண்டும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.