கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கேரள மாநில ஆளுநருக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்பு முன்பு வந்த போது, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், “8 மாதங்களாக மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. குடியரசுத் தலைவர் சில மசோதாக்களுக்கு பதிலளிக்கவில்லை. இது முழுக்க முழுக்க அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்று தன் வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து, இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கேரள மாநில ஆளுநரின் தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது மேற்குவங்க அரசு தொடர்ந்த மனுவையும் இத்துடன் சேர்க்க மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி, மேற்குவங்க மாநில ஆளுநரின் செயலாளருக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார். 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.