சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
Published on

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் விளக்கம் கேட்டு திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும் மற்றும் கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. ஆட்சி மாற்றங்களின் போது கேரள அரசு மாறுபட்ட நிலைப்பாடுகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு இந்திய இளைஞர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, ஏன் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையக் கூடாது? இந்து மதத்தில் தடை ஏதும் உள்ளதா என நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படியே மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் சபரிமலை தேவசம் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கேரள அரசு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்‌கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்புக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com