தந்தை இறந்தபோது ஏற்பட்ட வலியை, வயநாடு மக்களின் துயரத்தை காணும்போது உணர்வதாக மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். மண்சரிவு ஏற்பட்டுள்ள வயநாட்டிற்கு தனது சகோதரியுடன் சென்ற ராகுல்காந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள சூரல்மலைக்கு ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் நேற்று நேரில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டனர். சூரல்மலையில் தற்காலிக பாலத்தில் சென்று பாதிப்புகளை பார்த்த இருவரும், பெய்லி பாலம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டனர். சேறால் மூடப்பட்ட பகுதிகளையும் இருவரும் பார்த்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள டாக்டர் மூப்பன் மருத்துவக்கல்லுரி மற்றும் சமூக நல மையத்திற்குச் சென்று அங்கு உறவுகளை இழந்து நிற்கும் குடும்பங்களைச் சந்தித்து இருவரும் ஆறுதல் கூறினர். தொடர்ந்து மேப்பாடியில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடினர்.
இந்த கடினமான நேரத்தில் தானும், பிரியங்காவும் வயநாடு மக்களுக்கு துணை நிற்பதாகவும், நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வுப்பணிகளை உன்னிப்பாக கவனித்துவருவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி கூறுகையில், “என் தந்தை இறந்தபோது உணர்ந்த வலியை இப்போதும் உணர்கிறேன். இங்கு நிறைய தந்தைகள், நிறைய தாய்மார்கள், நிறைய குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். அவர்களின் வலியை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. அனைவரும் வயநாட்டு மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்.
இங்கு சேவைசெய்யும் மருத்துவர்கள், செவிலியர், ராணுவத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் ஒன்றுபட்டு வயநாட்டுக்கு உதவ வேண்டும். அனைவரும் வயநாட்டு மக்களுக்கு துணை நிற்போம். இந்த உலகின் மொத்த கவனமும் வயநாட்டை நோக்கி திரும்பியிருக்கிறது. நிறைய பேர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்” என தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி கூறுகையில், “தனது தாய் மற்றும் பாட்டியின் கரங்களை 6 மணிநேரம் பிடித்துக்கொண்டே இருந்த ஒரு சிறுவன், ஒரு கட்டத்தில் தனது தாயை தவறவிட்டு, பாட்டியை மட்டும் காப்பாற்றியபடி உயிர்தப்பியிருக்கிறான். இதுபோல பல சம்பவங்களை கூறினார்கள். என்னால் இந்த வலியை தாங்க முடியவில்லை. அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை. அவர்களின் வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் இந்த இடத்துக்கு போக விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க உதவுவது பற்றி நாளை அரசுடன் ஆலோசிப்போம். தாய், தந்தையை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவுவது பற்றி கலந்தாலோசிப்போம்” என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங்கிரஸ் கூட்டணிக்கட்சியினர் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார். இதேபோன்ற நிலச்சரிவுகளும், இயற்கை பேரிடர்களும் தொடர்ந்து ஏற்படுவது மிகவும் கவலை அளிப்பதாக கூறிய ராகுல்காந்தி, வருங்காலங்களில் இதனை தவிர்க்க செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டியது அவசியமாகியிருப்பதாக தெரிவித்தார்.