தேசத்தை இணைக்கும் தைத் திருநாள்.... நாடெங்கும் பல்வேறு பெயர்களில் பொங்கல்...!

தேசத்தை இணைக்கும் தைத் திருநாள்.... நாடெங்கும் பல்வேறு பெயர்களில் பொங்கல்...!
தேசத்தை இணைக்கும் தைத் திருநாள்.... நாடெங்கும் பல்வேறு பெயர்களில் பொங்கல்...!
Published on

தமிழகத்தில் பொங்கல் ‌திருநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் பிற மாநிலங்களிலும் இப்பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாப்பட்டு வருகிறது.

அறுவடைத் திருநாளான பொங்கல் தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் கொண்டாடப்படுகிறது. மகரசங்கராந்தி என்ற பெயரில் 4 நாட்கள் களைகட்டும் கொண்டாட்டத்தின் முதல் நாளான போகியன்று பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பது, பொங்கலிட்டு உண்பது ஆகியவை இங்கும் உண்டு.

மகாராஷ்டிராவிலும் மகரசங்கராந்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் சங்கராந்தி என்ற பெயரில் இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது. காளைகளை தீமிதிக்க விடுவதும் கரும்புத் துண்டுகள், வெள்ளை எள் மற்றும் சர்க்கரையை பரிமாறிக் கொள்வது இந்நாளின் சிறப்பம்சமாகும்.

குஜராத் மக்கள் உத்தராயண் என்ற பெயரில் இதனைக் கொண்டாடுகின்றனர். கண்கவரும் வண்ணமயமான பட்டங்களை பறக்க விடுவதும், வயதில் பெரிய குடும்ப உறுப்பினர்கள் இந்நன்னாளில் இளையோருக்கு பரிசுகள் தந்து ஆசிர்வதிப்பதும் வழக்கம்.

பஞ்சாப் மாநிலத்தில் லோஹரி என்ற பெயரில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. தீயை மூட்டி அதைச் சுற்றி நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உற்சாகம் பொங்க பாங்ரா நடனம் ஆடுவது லோஹிரியின் சிறப்பம்சமாகும்.
உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பீகாரின் மேற்குப் பகுதியிலும் கிச்சிரி என்ற பெயரில் கொண்டாட்டங்கள் சிறக்கும். அலகாபாத் திரிவேணி சங்கமம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இந்நாளில் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது.

டெல்லி, ஹரியானா பகுதியில் சக்ராத் என்ற பெயரிலும் அசாமில் பொகாலி பிஹு என்ற பெயரிலும் தைத் திருநாள் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com