குற்றவியல் சட்டங்கள்.. பழைய சட்டம் VS புதிய சட்டம்.. முழு விவரம்!

ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்த குற்றவியல் சட்டங்களுக்கும், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள குற்றவியல் சட்டங்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பழைய Vs புதிய குற்றவியல் சட்டங்கள்
பழைய Vs புதிய குற்றவியல் சட்டங்கள்புதிய தலைமுறை
Published on

பழைய குற்றவியல் சட்டத்தின்படி புகார் அளித்தவருக்கு FIR நகல் வழங்குவது கட்டாயமில்லை, ஆனால் புதிய சட்டத்தின்படி FIR நகல் வழங்குவது கட்டாயமாகும். குற்றம் நடந்த எல்லையில் உள்ள காவல்நிலையத்தில் மட்டுமே பழைய சட்டப்படி புகார் அளிக்கலாம் என்று இருந்த நிலையில், புதிய சட்டப்படி எந்த காவல்நிலையத்திலும் புகார் அளிக்க முடியும்.

பழைய சட்டப்படி காவல்துறையினர் 120 நாட்கள் வரை விசாரணை நடத்தலாம். ஆனால் புதிய சட்டத்தில், காவல்துறையினர் 90 நாட்களுக்குள் விசாரணையை முடிப்பது கட்டாயமாக உள்ளது. காவல்நிலையத்தில் புகார் அளிப்பவருக்கு விசாரணை விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போதைய சட்டப்படி விசாரணை விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

அதேபோல், சாட்சிகள் நீதிபதி முன்பாகவோ, காவல்துறை முன்பாகவோ நேரில் ஆஜராக வேண்டும் என்ற விதி மாறி, காணொலி மூலம் சாட்சிகள் ஆஜராகலாம் என புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் அசல் ஆவணங்களை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்றிருந்த நிலையில், புதிய சட்டத்தில் ஆவணங்களை நகல்களாக தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை அல்லது ஆய்வின்போது வீடியோ பதிவு அவசியமில்லை என முன்பு இருந்த நிலையில், தற்போது விசாரணை மற்றும் ஆய்வின்போது வீடியோ பதிவு கட்டாயமாகியுள்ளது.

சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்ற நடைமுறை மாற்றப்பட்டு, புதிய சட்டப்படி பாதுகாப்பு தேவையென்றால் சாட்சிகள் காவல்நிலையத்தில் அணுகலாம். பழைய சட்டப்படி கைது செய்யப்படும் நபரை காவல்துறையினர் 15 நாட்கள் காவலில் விசாரிக்க முடியும். ஆனால், புதிய சட்டத்தில் 40 முதல் 60 நாட்கள் வரை காவலில் விசாரிக்கலாம்.

தப்பி ஓடும் ஆபத்து உள்ளவருக்கு மட்டும் கைவிலங்கு போட வேண்டும் என பழைய சட்டத்தில் இருந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டப்படி கொலை, பாலியல் வன்கொடுமை குற்றம்புரிந்தவருக்கும் கைவிலங்கு போட முடியும். பழைய சட்டப்படி கொலை வழக்கு பிரிவு 302 என்றிருந்த நிலையில், அது கொலை வழக்கு பிரிவு 101 ஆக மாற்றப்பட்டுள்ளது.

மோசடி வழக்கு பிரிவு 420, புதிய சட்டப்படி 316 ஆகவும், சட்டவிரோதமாக கூடுதல் வழக்குப்பிரிவு 340-க்கு பதிலாக 187 என மாறியுள்ளது. பழைய சட்டப்படி தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல் பிரிவு 121 என்றிருந்த நிலையில், அது பிரிவு 146ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கு பிரிவு 499, புதிய சட்டப்படி 384ஆக மாற்றப்பட்டுள்ளது. கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு பிரிவு 376-க்கு பதிலாக பிரிவு 63, 64, 70ஆகவும்,தேசத்துரோக வழக்கு பிரிவு 124-க்கு பதிலாக 170ஆகவும் புதிய சட்டத்தின்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழைய Vs புதிய குற்றவியல் சட்டங்கள்
இன்னும் மக்களிடம் புழங்கும் ரூ.7,581 கோடி 2000 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com