ஹமாஸ் அமைப்பை இந்தியாவில் தடை செய்வது குறித்து மக்களவையில் கேரள மாநிலத்தை சேர்ந்த எம்.பி. கும்பகுடி சுதாகரன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பெயரில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டிருந்தது. அந்த பதில், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இச்சூழலில், "அந்த கேள்வி - பதிலுக்கான ஆவணம் எதிலும், தான் கையெழுத்திடவில்லை" என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சரிடம் ஒப்புதல் பெறாமல், அவருக்கே தெரியாமல் எப்படி பதில் அளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் அதிகாரப்பூர்வமாகவும் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.