உத்தரப்பிரதேசத்தில் போலி வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு கொள்ளையடிக்க வந்த நபரை வங்கி ஊழியர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். மாதத்தின் துவக்கம் என்பதால் வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர் தான் வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க வந்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் தனது உடலில் வெடிக்குண்டு கட்டியிருப்பதாகவும் யாராவது எதாவது செய்யலாம் என முயற்சித்தால் வெடிக்க செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் தான் அணிந்திருந்த வெடிக்குண்டுகளை அவர் காண்பித்துள்ளார். இதனால் அச்சத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் செய்வதறியாமல் இருந்தனர்.
எப்படியோ அந்த நபரை வங்கி ஊழியர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர். காவல்துறையின் விசாரணையில் அந்த நபர் அணிந்திருந்தது போலி வெடிக்குண்டு என்பது தெரியவந்துள்ளது. மேலும் தான் பண கஷ்டத்தில் இருப்பதால் என்ன செய்வதென்று தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். அந்த நபர் மனநலம் சரியில்லாதவர் போல் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.