அசாம் மாநிலத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் அரிதான நோயினால் பாதிக்கப்பட்டு வயிறு இரண்டு கால்பந்து அளவு வீங்கி இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளான்.
அசாம் மாநிலம் பர்பெட்டா பகுதியில் வசிக்கும் சஹானூர் ஆலம் என்ற ஏழு வயது சிறுவன், அரிதான நோய் காரணமாக வயிறு பானை போல் வீங்கி உயிருக்கு போராடி வருகிறான். அவனது கை, கால், முகம் என அனைத்தும் மிக சிறிய அளவில் உள்ளது. கை மற்றும் கால்கள் ஒல்லியாக உள்ளது. ஆனால் வயிறு மட்டும் பானை போல் வீங்கி காணப்படுகிறது. இதனால் நடக்கக் கூட முடியாமல் சஹானூர் அவதி படுகிறான். பித்த நீர் சுரக்கும் நாளங்களில் ஏற்பட்ட பிரச்னையே இந்த நோய்க்கான காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சஹானூரால் சரியாக சாப்பிட கூட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளான்.
ஷமிளா - சலிம் உதின் தம்பதியினர் சஹானூர் ஆலம் 7 மாத குழந்தையாக இருக்கும்போது தத்தெடுத்தனர். அதன்பின் 5 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக இருந்த சஹானூர் படிப்படியாக இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். சஹானூரை உயிருடன் வைத்திருக்க ஒரே வழி அறுவை சிகிச்சை செய்வது மட்டும் தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய 2 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்றும், விரைவில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ஷாஹனூர் உயிர் வாழ்வது சந்தேகம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஷமிளா - சலிம் உதின் தம்பதியினர் வறுமையில் வாடுவதால் சிகிச்சைக்காக பலரிடம் பண உதவி கேட்டு வருகின்றனர். சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக அரசு தரப்பிலும் உதவி கேட்டுள்ளனர் அவரது பெற்றோர்கள்.